சனி, 14 ஆகஸ்ட், 2010

அத்தை மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதை கொண்டு செல்லவா
எந்தன் நினைவை தந்து செல்லவா

மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா
மாலை இளந்தென்றல் தன்னை தூது விடவா
நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா
நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா
முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா
நிலம் பார்த்து மெதுவாக உன்னை நாடவா
உனை நாடி உனை நாடி
உனை நாடி உனை நாடி உறவாடவா

அத்தை மகனே போய் வரவா
உந்தன் மனதை கொண்டு செல்லவா
எந்தன் நினைவை தந்து செல்லவா

திங்கள், 26 ஜூலை, 2010

சமயபுரத்தாள்

சிறு வயதிலிருந்து பல முறை சமயபுரம் சென்றிருந்தாலும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தான் அம்மன் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு.

சித்திரை தேரோட்டத்திற்கு முன் அம்மன் ஆதியில் குடிகொண்ட கண்ணனூரில் தங்கி இருப்பாள். அப்போது மிகவும் ஆக்ரோசமாக இருப்பாள் என்று சொல்வார்கள்
(அம்மாவாசை அன்று உட்கிரமகவும், பௌர்ணமி அன்று சாந்தமாகவும் இருப்பாள் என்றும் என் அம்மா சொன்னாங்க. அம்மாவாசையில் நான் இன்னும் பார்க்கலை)

மூன்று மாதங்களுக்கு முன் நாங்கள் சித்திரை தேரோட்டத்திற்கு இரண்டு நாள் முன் கண்ணனூர் சென்று அம்மனை வழிபட்டுட்டு சமயபுரம் வந்து பார்த்தோம்.



என்னால் நம்ப முடியவில்லை. அந்த அம்மனின் சிலையில் எப்போது இருக்கும் அலங்காரம் தான். ஆனால் அன்று நிஜமாலும் அவ்வளவு கோபமா உட்கிரமா அவள் தெரிந்தாள். என்னால் நம்பாமலும் இருக்க முடியலை. ஒருவேளை ரொம்ப நாள் கழித்து பார்ப்பதால் அப்படி தெரிகிறது போல என்று விட்டு விட்டேன்.

அம்மாவாசை, பௌர்ணமி அன்று கோவிலில் மக்கள் தங்குவர்.

பெரும்பாலும் சேலம், ஈரோடு மக்கள் கூட்டம் தான் அதிகம். எனக்கு விவரம் தெரிந்த போதே எங்கள் உறவினர்கள் எல்லாம் (சேலம், ஈரோடு தான் எங்க சொந்த ஊரு) சமயபுரம் வருடம் தவறாமல் கண்டிப்பா வந்து செல்வார்கள். மேலும் எந்த ஒரு நிறை,குறை இருந்தாலும் சமயபுரத்து அம்மனை நினைத்து ஒரு ரூபாய் மஞ்சள் துணியில் முடித்து வைத்து குறை தீர்ந்ததும் கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்துவர்



போன பௌர்ணமி அன்று என் அம்மாவுடன் சமயபுரம் போனேன்.
என்னால் நிஜமாலும் ஆச்சரியம் படாமல் இருக்க முடியலை.
போன முறை அவ்வளவு கோபமா உட்கிரமா இருந்த அம்மன் பௌர்ணமி அன்று அவ்வளவு சந்தமா அழகா.... பார்த்ததிலிருந்து மனது முழுக்க நிறைந்து இருந்தாள்.

நேற்று(பௌர்ணமி) நானே என் அம்மாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போனேன். போன பௌர்ணமி அன்று பார்த்தா அதே சாந்தமான முகம்.

சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து அவளின் மடியில் நான் ஒரு குழந்தையாக இருந்தேன். அவள் என் தலை வருடி கொடுத்தாள். எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. அந்த அரவணைப்பில் மனதில் இருந்த பயம், கோபம், குழப்பம், எல்லாம் போயேவிட்டது. மனதில் ஒரு அமைதி, சந்தோஷம், ஒரு நிறைவு ....
இது ஒரு கற்பனை என்றாலும் உண்மை என்றே உணருகிறேன். அந்த தாய்மை சுகத்தை அனுபவிக்கிறேன்.

அவளிடம் ஒரு வேண்டுதல் வைத்துவிட்டு தான் வந்தேன்
நாங்கள் முன் பிறவி, இப்பிறவியில் செய்த பாவங்களுக்காகவும்,முட்டாள்தனத்திர்க்காகவும் எங்கள் முன்னோர்கள் சேர்த்து வைத்த பாவங்களுக்காகவும் பல கஷ்டங்கள் அனுபவித்தே ஆக வேண்டி இருக்கிறது. இப்படி கஷ்டங்கள் அனுபவிக்கும் நேரத்தில் மனது துவண்டு, அழுது, தாங்க முடிய துயத்தில் இருக்கும் போதெல்லாம் நீ இதே போலவே என்னை உன் மடியில் குழந்தையாக வைத்து வருடி கொடுக்க வேண்டும்

மனதில் அமைதியும், நிறைவும், இருந்தால் என்ன கஷ்டம் வந்தால் என்ன?
இரண்டில் ஒன்று பார்த்து விட மாட்டோமா?

செவ்வாய், 20 ஜூலை, 2010

பட விமர்சனம்

நேற்று எங்கள் வீட்டு குட்டி தேவதை சுபிக்ஷா முதல் முறையாக திரையரங்குக்கு சென்று களவாணி படத்தை பார்த்து சொன்ன விமர்சனம்

சித்தி சினிமா போனோம். அங்க பெரிரிரிரிய T.V வச்சிருந்தாங்க.

திடீர்ன்னு லைட் ஆப் பண்ணிட்டாங்க. நான் வீட்டுக்கு போலாம் ன்னு சொன்னேன். அப்பா ஐஸ் கிரீம் வாங்கி தரேன்னு சொல்லி உட்கார வச்சுட்டாங்க

படம் ஜோக் ஜோக்கா இருந்துச்சு

எல்லாரும் சிரிச்சாங்க, கை தட்டினாங்க நானும் சிரிச்சேன், கை தட்டினேன்
Chairla நல்ல குதிச்சேன், கத்தினேன்.

Super Supera இருந்துச்சு சித்தி

நீங்களும் ஊருக்கு வாங்க

உங்களையும் சினிமாக்கு கூட்டிட்டு போறேன்.

வியாழன், 11 மார்ச், 2010

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்...




பேருந்தில் செல்வது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்தால் இன்னும் ரொம்ப பிடிக்கும்.என்னையே மறந்து கனவு உலகத்தில் புகுந்து விடுவேன்(கண்களை விழித்துக் கொண்டு தான்). ஆனால் அதனால் எத்தனை தொல்லைகள் ...

மே மாதம் பரீட்சை வருகிறது. எங்கள் M.D வெளிநாட்டிற்கு சென்றுள்ளதால் அலுவலகத்தில் வேலை இருக்காது. கிடைக்கும் நேரத்தில் படிக்கலாமே என்று நினைத்து நேற்று அலுவலகத்திருக்கு செல்லும் போது என் புத்தகத்தையும் எடுத்து சென்றேன்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்தில் கிளம்பினேன். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் என் புத்தகத்தை ஒரு பெண்ணிடம் கொடுத்து வைத்திருக்க சொன்னேன். பேருந்தில் இருந்த மற்றொரு பெண் தன் காதல் கதையை அவள் தோழியிடம் சொல்லி கொண்டு வந்தாள். நானும் அந்த கதையை சுவாரசியமாக கேட்டுகொண்டே வந்தேன். பிறகு நான் இறங்கும் நிறுத்தம் வந்ததும் இறங்கிவிட்டேன். வாங்கிய பயண சீட்டையும் தூக்கி போட்டு விட்டு அந்த பெண்ணின் காதல் கதை நினைத்து கொண்டே அலுவலகம் வந்து விட்டேன்.

அலுவலகம் வந்த பின் தான் ஞாபகம் வந்தது என் புத்தகத்தை பேருந்திலே ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டு வந்தது. ஒரு பத்து நிமிடம் ஒன்றும் புரியவில்லை. பின்னர் ஒரு வழியாக நார்மலுக்கு வந்து என்ன பண்ணுவது என்று யோசித்தேன்.

நான் ஏறிய பேருந்து பெயர் - தெரியாது.

டிக்கெட் - கிடையாது.

நான் யாரிடம் புத்தகம் கொடுத்தேன் - தெரியாது.

நான் புத்தகம் கொடுத்த பெண் எங்கு போகிறாள் - தெரியாது.

எனக்கு தெரிந்து எல்லாம் அந்த பேருந்து எங்கு போகும் என்பது மட்டுமே. ஆனால் அந்த ரூட்டில் (பால்பண்ணை வழியாக ) 5 நிமிடதிருக்கு ஒரு முறை ஒரு தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் செல்லும்.

உடனே மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் சென்றேன்.



2,3 பேருந்து நடத்துனரிடம் 9.45மணிக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் பேருந்து எது என்று கேட்டு அந்த தனியார் பேருந்தின் பெயரை தெரிந்து கொண்டேன். பின்னர் நானே அது மீண்டும் பேருந்து நிலையம் வரும் நேரத்தையும் கணித்து கொண்டு, இறைவனையும் வேண்டி கொண்டு காத்திருந்தேன். சரியாக என் கணிப்பு படி 12 மணிக்கு அந்த பேருந்து, சத்திரம் வந்தது.

நல்ல வேலை அந்த பெண் என் புத்தகத்தை நடத்துனரிடம் கொடுத்து விட்டு சென்றிருந்தாள். எப்போதும் போல நடத்துனரும் படிக்கிற பெண் கவனமாக இருக்க கூடாத ன்னு சில அறிவுரைகள் கூறினார்.

அது ஏனோ தெரியவில்லை பேருந்தில் தான் நெறைய கதைகளும், கனவுகளும் எனக்கு வருகிறது

முன்னொரு முறை அப்படி தான் பேருந்தில் முதல் இருக்கையில் உட்கார்ந்து முதல் நாள் பார்த்த படத்தை பற்றி கனவு கண்டு கொண்டு இருந்தேன். திடீரென்று திரும்பி பார்த்தால் ஓட்டுனரும், நடத்துனரும் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர். ஒன்றும் புரியாமல் பின்னால் திரும்பி பார்த்தால் பேருந்தில் ஒருத்தர் கூட இல்லை. வண்டி சத்திரம் பேருந்து நிலையத்திருக்கு வரும் சற்று முன்னதாகவே எல்லாரும் இறங்கிய பின்னர் ஓட்டுனரும், நடத்துனரும் என்னை இறங்க சொல்லி இரண்டு, மூன்று முறை கூப்பிட்டு இருக்கிறார்கள்.. வெட்கத்தோடு வண்டியை விட்டு வேகமான இறங்கினேன்.

இன்னோர் முறை சமயபுரம் போகும் போது நடத்துனரிடம் ஐம்பது ருபாய் கொடுத்து டிக்கெட் கேட்டேன். அவர் மீதி பணத்தை இறங்கும் போது தரேன் என்றார். நானும் சரி என்று இது போல ஒரு கனவு உலகத்துக்கு போய்விட்டேன். சமயபுரம் வந்ததும் பேருந்தை விட்டு இறங்கி பேருந்து போன பிறகு தான் மீதி பணத்தை வாங்க வில்லை என்று தெரிந்தது. நல்ல வேலை அப்போது டிக்கெட்டை பத்திரமாக வைத்திருந்தேன். பின் சத்திரம் பேருந்து நிலையத்தில் அந்த பேருந்து வந்ததும் நடத்துனரிடம் மீதி பணமும் , திட்டும் பெற்று கொண்டேன்.

அனுபவங்கள் இதோடு முடியுமோ அல்லது இன்னும் கிடைக்குமோ தெரியலை.....