சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் சுவரொட்டி விளம்பரத்திற்காக ஒருவர் வந்தார். எங்கள் கம்பனிக்காக பல இடங்களில் அவர் சுவர் விளம்பரம் எழுதி உள்ளார். எங்கள் அலவலக சுவருக்கும் விளம்பரம் எழுதுவதற்காக அவர் வந்த போது அவரோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் தனது தொழில் திறமைகளை பற்றி பெருமையாக பேசும் பொது, 'காவிரி ஆத்துக்கு பக்கத்தில ஒரு சுவர் மேல இருக்கும் பாருங்க விளம்பரம் அது நா தான் எழுதினேன். அதை ரொம்ப ரிஸ்க் எடுத்து எழுதினேன்' ன்னு சொன்னார். நான் பதிலுக்கு 'அந்த பெரிய சாக்கடை சுவத்துலயும் எழுதியது நீங்க தானா?' என்று கேட்டேன். ஏனெனில் எனக்கு அந்த சாக்கடை சுவர்மேல் எழுதுவது தான் பெரிய விஷயமா இருந்தது. அந்த சாக்கடை பார்க்கும் போதே எனக்குள் ஒரு பயமும், அருவருப்பும் வரும். அதில் கஷ்டபட்டு நாத்தத்தை பொறுத்துக்கிட்டு, கயிறு கட்டி எழுதுவது என்னை பொறுத்தவரை காவேரி ஆற்று சுவற்றில் எழுதுவதை விட ரொம்ப ரிஸ்க் .
ஆனால் நா கேட்ட விதம் அவருக்கு சங்கடத்தை கொடுத்தது. பிறகு அதை சமாளிக்க 'நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?'ன்னு கேட்டேன். அவர் சொன்ன பதில் எனக்கு வியப்பை கொடுத்தது. அவர் பள்ளிக்கே போகலையாம். 'சின்ன வயசிலே இதுபோல ஒருத்தர்கிட்டே வேலைக்கு போனேன். அப்படியே இந்த தொழில் கத்துகிட்டேன்' ன்னு சொன்னார்.
கடைசியாக அவர் சுவர் எழுதியதியதற்கான கணக்கை பார்த்து ரொம்ப ஆச்சர்யபட்டு போனேன். ஏனெனில் சுவர்களில் அச்சு வார்த்தால் போல் அழகாக எழுதும் அவர் கையெழுத்து அந்த பில்லில் தப்பு தப்பான ஸ்பெல்லிங்குடன் என் கையெழுத்து போலவே படு மோசமாக இருந்தது.