செவ்வாய், 14 ஜூலை, 2009

சந்தோஷ்

என் அண்ணனின் உயிர் தோழன்.
ஒரு சாதரண நவரச குணங்கள் குடிகொண்ட வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒருவரை பிடித்தல் அதுவும் எந்த குறையும் இல்லாமல் அவர் மீது அன்பு செலுத்துதல் என்பது எளிதாக பார்க்க கூடிய விஷயம் இல்லை.

சந்தோஷ் அண்ணா எங்கள் வீட்டில் அப்படி பட்ட ஒரு சிறந்த இடத்தில் இருந்தார். எங்கள் வீட்டில் நடந்த சுக துக்கங்களில் குடும்பத்தில் ஒருவராய் இருந்தார். அவர் பார்ப்பதற்கு பணக்கார பையன் தோரணையில் இருப்பார். ஆனால் பழக எளிதானவர். என் அண்ணனுக்கு பல ஆன்மிக சிந்தனைய தூண்டியவர் அவர் தான்.

அம்மா, அப்பா, ஒரு அக்கா என ஒரு சாதரண ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை பார்த்தவர். கடந்த 4 வருடங்களாக தான் சென்னையில் ஒரு நல்ல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்து தன் குடும்பத்தின் ஏழை பேயை விரட்டினார்.
கடந்த வெள்ளி கிழமை (10.07.09) தனது பெற்றோருக்கு 60 ம் கல்யாணத்தை நடத்தி சந்தோச பட்டார். அவர் பெற்றோரும் அவருக்கு பெண் பார்த்து நாள் குறித்து கொண்டு இருந்தனர்.

13.07.09 திங்கள் கிழமை சந்தோசத்துடன் அவர் சென்னை செல்ல தயாரானார். எங்கள் 'சந்தோஷ்' த்தை எமன் எடுத்து செல்ல தயாராக இருக்கிறான் என்பதை அறியாமல் நாங்களும் சந்தோசமாக இருந்தோம். அன்று காலை சந்தோஷ் அண்ணா அனைவரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அவர் பைக்கில் திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்றார். விருத்தாச்சலத்தில் ஒரு லாரி அவர் மீது மோதியதில் அந்த இடத்திலே அவர் உயிர் பலி ஆனது. தங்களது ஒரே உத்தம புத்திரனை இழந்த அவரது பெற்றோரின் நிலையை சொல்லி மாறாது.

கடவுள் பசி என்ற ஒற்றை கொடுத்து விட்டதால் இதோ எங்கள் கண்ணீர் 2 நாட்கள், என் அண்ணனின் கண்ணீர் 2 வாரங்கள், அவர் குடும்பத்தாரின் கண்ணீர் 2 மாதங்கள், அவர் பெற்றோரின் கண்ணீர்..... ....... .... .... ..... ஒரு குறிப்பிட்ட காலம் வரை விடாமலும் பிறகு விட்டு விட்டும் தொடரும்.

இவ்வளவு நல்லவருக்கே இது தான் நிலைமை. (என் நிலைமை????)

வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்

புது கூடு போகும் எங்கள் சந்தோஷ் அண்ணாவின் ஆன்மா பல சந்தோசங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்.